சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் உள்ள சிறுகுளம் கண்மாயில், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி ஆழப்படுத்தும் பணி ஜரூராக நடந்து வருகிறது. கரைகளை உயர்த்தி வருகின்றனர். இப்பணிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிவகாசியில் உள்ள சிறுகுளம் கண்மாய் கரையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தன. இதனை அகற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடுக்கப்பட்டது. நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள், கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், மாநகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால், கட்டிட இடிபாடுகளை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டனார். இதனால், அப்பகுதியில் கட்டிட இடிபாடுகள் மலைபோல் குவிந்து கிடந்தன.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் உள்ள காலியிடங்களில் இரவு நேரக் கடைகள், தற்காலிக வீடுகளை சிலர் அமைத்து மீண்டும் ஆக்கிரமிக்க துவங்கினர். இதேபோல, சிவகாசி பகுதிக்கு பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஏற்ற வரும் லாரிகள் அனைத்தும் சிறுகுளம் கண்மாய் கரை பகுதி ஆக்கிரமிப்பு அகற்றப்ப்டட இடத்தில் நிறுத்தப்பட்டு வந்தது. சிவகாசி-விருதுநகர் செல்லும் மெயின் சாலையில் சிறுகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு பகுதி உள்ளது. இந்த சாலையில் காலை, மாலை என எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இங்கு வாகனங்கள் மற்றும் கடைகள் அமைத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியர் மீது வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்த சாலையில் அதிகளவில் சென்று வருகின்றன. ஆனால், இங்கு நிறுத்தப்படும் வாகனங்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் இங்கு நடைமேடையுடன் கூடிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது.
இதனிடையே, மாநகராட்சி பகுதியில் பசுமை இயக்கத்தினர் ெபரியகுளம், செங்குளம் கண்மாயை ஆழப்படுத்தி நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் சிறுகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கட்டிட இடிபாடுகளை அகற்றி கண்மாய் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தற்போது சிறுகுளம் கண்மாய் வடக்கு பகுதியில் ஆழப்படுத்தி கிழக்கு பகுதியில் உள்ள கரையை 3 அடி உயரம் வரை பலப்படுத்தி வருகின்றனர். சிவகாசி சிறுகுளம் கண்மாய்க்கு பெரியகுளம் நிரம்பி ெளியேறும் மழைநீர் அரசு மருத்துவமனை முன்புள்ள ஓடை வழியாக சிறுகுளம் கண்மாய் வந்தடையும். இந்த ஓடையையும் பசுமை இயக்கத்தினர் தூர்வாரி ஆழப்படுத்தியுள்ளனர். சிறுகுளம் கண்மாய் ஆழப்படுத்தும் பணிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.